Tuesday 31 May, 2011

இன்று புகையிலை எதிர்ப்பு தினம்

புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் உலக சுகாதார நிறுவனத்தால், மே 31ம் தேதி, சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை ஒழிப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. "புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும் அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே' இத்தினத்தின் நோக்கம். புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட, புகையிலை பாதிப்பால் ஏற்படும் நோய்களை தீர்ப்பதற்கு, ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் அதிகம் செலவாகிறது.

ஆறு விநாடிக்கு ஒருவர் : மனித உயிர்களுக்கு இறப்பை அளிக்கும் இரண்டாவது முக்கிய காரணியாக புகையிலை கருதப்படுகிறது. புகையிலை என்றதும் நினைவிற்கு வருவது "சிகரெட்'. இதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள் தான், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43, புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியவை. உலகளவில் 6 விநாடிக்கு ஒருவர் புகையிலையால் பலியாகிறார். ஆண்டுக்கு 60 லட்சம் பேர், புகையிலை மற்றும் சிகரெட்டால் இறக்கின்றனர். 2030க்குள் இது ஒரு கோடியாக அதிகரிக்கும், என கணிக்கப்பட்டுள்ளது. இதில், 70 சதவீதம் பேர், வளரும் நாடுகளில் உள்ளனர், என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

"ஸ்டைல்' : வளர்ந்த மெட்ரோ நகரங்கள் மட்டுமல்லாமல் சிறிய நகரங்களிலும் வயது பாரபட்சம் இல்லாமல் "சிகரெட்' பிடிக்கின்றனர். பெரும்பாலும் வேலைப்பளு, உடல் பருமனை குறைக்க புகைக்கின்றனர் என்றும், சிலர் "ஸ்டைலுக்காக' புகைக்கின்றனர் என்றும் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

நிறுத்தினால் கிடைக்கும் நன்மைகள் : புகை பழக்கத்தை படிப்படியாக நிறுத்தாமல் ஒரேயடியாக நிறுத்துவதே சிறந்தது. இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. புகைக்காமல் இருந்தால் ரத்த அழுத்தம், இருதயத்துடிப்பு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு சீரடையும். புகை பிடிக்காமல் ஒருநாள் இருந் தால், ரத்தத்தில் கலந் திருக்கும் கார்பன் மோனாக்சைடு வெளியேற்றப்படுகிறது. நுரையீரல் சுத்தமாகிறது. இரண்டு நாட்கள் இருந்தால், உடலில் சேர்ந்துவிட்ட நிக்கோடின் அகற்றப்படும். சுவைக்கும் திறனும், நுகரும் திறனும் அதிகரிக்கும்.மூன்று நாட்களுக்கு பிறகு சுவாசிப்பது எளிதாகிறது. 2 முதல் 21 வாரங்களுக்குள் ரத்த ஓட்டம் சீரடைகிறது. 3 முதல் 9 மாதங்களுக்குள் இருமல், தும்மல் போன்ற குறைபாடுகள் குறைகிறது. நுரையீரலில் செயல்பாடு 5 முதல் 10 சதவீதம் அதிகரிக்கிறது. புகை பிடிப்பதை நிறுத்தி 4 ஆண்டுகளுக்கு பிறகு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு, புகைப்பவர்களை ஒப்பிடும் போது பாதியாக குறைகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பவர்களை ஒப்பிட்டால் பாதியாக குறைகிறது.
புகைபிடிக்கும் பழக்கத்தை விட்ட முதல் வாரம் சிரமமாக இருக்கும். எனினும், இதனால் கிடைக்கும் பலன், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.

மறுப்போம், மறப்போம் மயானக்குச்சியை : இளம்வயதில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது. ஒருநாளில் 10 சிகரெட் பிடிப்பவர் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுப் பொருளை உட்கொண்டு வெளியிடுகிறார். அவர் தன்னை கெடுப்பதுடன், மனைவி, குழந்தைகளையும் கெடுக்கிறார். பியூட்டேன், காட்மியம், ஸ்டியரிக் ஆசிப், அம்மோனியா, நாப்தலமைன், போலோனியம் உட்பட வேதிப்பொருட்கள் சிகரெட் புகையில் உள்ளன. இவை வெடிகுண்டு, பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கப் பயன்படுபவை. எனவே சிகரெட்டும் ஒரு வெடிகுண்டுதான்.

விளைவுகள்:புகைபழக்கம் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கிறது. மாரடைப்பு, நுரையீரல் நோய், புற்றுநோய், சர்க்கரை, பக்கவாதம், தமனிச்சுருக்கம் குறிப்பாக கால், கை தமனிகள் அடைப்பு, ரத்தக்கொதிப்பு ஏற்படுகிறது. புகைபிடிப்போருக்கு மாரடைப்பால் இளவயதிலும் திடீர் மரணம் ஏற்படலாம். இது இருதய துடிப்பையும், ரத்தக்கொதிப்பையும் கூட்டுகிறது. மூக்குப்பொடி, புகையிலை உண்பது, பீடி புகைப்பதும் சிகரெட்டுக்கு சமமானதே. ஆண்களுக்கு மலட்டுத் தன்மையும், வீரியக்குறைவும் ஏற்பட வாய்ப்புள்ளது. புகை பிடிப்போரின் குழந்தைகளுக்கு சளி, இருமல், மூச்சுத் திணறல் ஏற்படலாம்.

நிறுத்தும் வழிகள்:* மனஉறுதியோடு ஆர்வத்தை அடக்க வேண்டும்.
* புகைபிடிப்பது தவறான செயல் என்பதை மனதில் நினைத்து பதியச் செய்ய வேண்டும்.
* புகைக்கும் ஆர்வம் ஏற்படும்போது சூயிங்கம்,
சாக்லெட், தண்ணீர் அருந்திவிட்டு நினைப்பை மாற்ற வேண்டும்.
* எலக்ட்ரானிக் சிகரெட், நிகோட்டின் கலந்த
கம், பேஸ்ட் பயன்படுத்தலாம்.

நிறுத்தினால் நன்மைகள்:* 20 நிமிடங்களில் ரத்தஅழுத்தம் குறைகிறது.
* எட்டு மணி நேரத்தில் ரத்தத்தில் கார்பன் மோனாக்சைடு குறைகிறது.
* 48 மணி நேரத்தில் மாரடைப்பு வரும் தன்மை குறைய துவங்கும்.
* 72 மணி நேரத்திற்கு பிறகு மூச்சுக்குழல் சுத்தமாகிறது.
* 3 முதல் 9 மாதங்களில் இருமல், சளி பிரச்னை குறைகிறது.
* ஒரு ஆண்டுக்குப் பின் மாரடைப்பு வரும் வாய்ப்பு பாதியாக குறைகிறது.
* 10 ஆண்டுகளுக்குப் பின் நுரையீரல்
புற்றுநோய் வரும் வாய்ப்பு அறவே இல்லாமல் போகிறது.

நன்றி:-http://www.dinamalar.com/News_Detail.asp?Id=249343

1 comment:

கால்நடை மருத்துவர் பக்கம் said...

விழிப்புணர்ப்பு ஏற்படுத்தும் பதிவு! நன்றி. தொடரட்டும் பதிவுகள்.

Post a Comment